நெல்லை கோவில் விழாவில் எஸ்.ஐ.யை கத்தியால் குத்திய வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு

நெல்லை: நெல்லை கோவில் விழாவில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு பாதுகாப்பு வழங்க காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர்.

அந்த விழா முடிந்த பிறகு ஆறுமுகத்துக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்கு வாதத்தின் போது ஆறுமுகம் திடீரென  காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார்.  இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு முன்னதாக காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆறுமுகம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories: