புதுச்சேரியில் பரபரப்பு: காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிவனடியார்கள் சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை காவல்நிலையத்தை சிவனடியார்கள் நேற்று மாலை திடீரென முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன் யூ டியூப் சேனல் ஒன்றில் ஒரு தனிநபர், சிதம்பரம் நடராஜரை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டம் நடந்தது.

இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். எழுத்துப்பூர்வமாக புகார் தருமாறு கூறினர். பின்னர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் மனு எழுதி கொடுத்தனர். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: