வீட்டின் மாடியில் நின்றிருந்தபோது சூறைக்காற்றுக்கு தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி: பென்னாகரம் அருகே சோகம்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கோடிஅள்ளி ஊராட்சி ஒண்டிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல்(35). கட்டிட தொழிலாளியான இவர், நேற்று அருகில் உள்ள ஜக்கம்பட்டிக்கு வேலைக்கு சென்றிருந்தார். நேற்று மாலை, அப்பகுதியில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அங்கிருந்த மளிகை கடையின் மொட்டை மாடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் ஷீட் சேதமடைந்தது. அதனை சரிசெய்வதற்காக, ஜெயவேல் அங்கு சென்றுள்ளார். அப்போது, வீசிய பலத்த காற்றுக்கு மொட்டை மாடியில் இருந்த அவர், தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள், பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயவேல் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: