ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி ஜுலை 2 -ம் தேதிக்கு மாற்றம்.: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி ஜுலை 2 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) தேர்வு செய்து வருகிறது.

திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வு 2022-க்கான ஆன்லைன் பதிவு செயல்முறை ஏப்ரல் 4, 2022 அன்று தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி, பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூன் 26, 2022 அன்று நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது அந்த தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஜூன் 26-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வு, ஜூலை 2-க்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜூலை 2-ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும். தாள் I காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், தாள் II பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: