கும்பகோணம் அருகே 150 கிலோ போதை பொருள் பதுக்கிய வாலிபர் கைது

பாபநாசம் : சுவாமிமலை அருகே அரசு தடை செய்த 150 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் சுவாமிமலை காவல் சரகம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 இது தொடர்பாக போலீசார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருளை மறைத்து வைத்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தட்ணாமூர்த்தி (31) என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: