முதல்வர் திராவிட மாடல் ஆட்சியில் விளிம்பு நிலை மக்களுக்கும் சமூக பாதுகாப்பு-கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பேச்சு

திருவண்ணாமலை : விளிம்பு நிலை மக்களுக்கும் சமூக நீதி உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி., சி.என்.அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி வரவேற்றார்.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி முறை தமிழர்களிடம் இருந்து வந்தது என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டு சான்றாகும். நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. உலகத்துக்கே வழிகாட்டியது தமிழ் மண்.மக்கள் பிரதிநிதிகளை ஊக்கப்படுத்த தமிழகத்தில் உள்ள 12,535 ஊராட்சி தலைவர்கள், 99,233 வார்டு உறுப்பினர்கள், 388 ஒன்றியக்குழு தலைவர்கள், 6,471 ஒன்றிய கவுன்சிலர்கள், 36 மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள், 655 மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 1.19 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு படிகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

உணவு உற்பத்தி குறைவால் பட்டினி கிடக்கும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கிய பிறகு பட்டினி, பஞ்சம் என்ற நிலை முழுமையாக நீங்கியது.மக்களிடம் வறுமை ஒழிய வேண்டும், நோயற்ற வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக இல்லம் தேடி மருத்துவம் எனும் சிறப்பான திட்டத்தை முதல்வர் கொண்டு வந்துள்ளார். நீர் நிறைந்த பசுமையான சமூக பாதுகாப்பு மிக்க பாலின சமத்துவம் கொண்ட கிராமங்கள் வேண்டும் என்பது தான் இந்த ஆட்சியின் நோக்கம்.  திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்.

தமிழர்களின் அடையாளம் திராவிடம். மக்கள் நலன் மட்டுேம முதல்வரின் நோக்கமாகும்.அனைத்து நிலைகளிலும் சமூக நீதியை நிலை நிறுத்துவது, விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் சமூக பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, அனைருக்கும் கல்வி மற்றும் வாழ்வாதாரம், பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, நிதி ஆதாரம் பெருக்குவது, வேளாண் உற்பத்தி, அடித்தட்டு மக்களுக்கும் மானியம் சென்றடைதல், பொது தேவைகள் முழுமையடைதல் போன்றவை தான் திராவிட மாடல் ஆட்சி.

கிராமங்கள் எல்லாம் சிறு நகரங்களாக வேண்டும் என முதல்வர் கருதுகிறார். அதற்காக, திட்டங்களை தீட்டி உழைக்கிறார். உள்ளாட்சியில் நல்லாட்சியை நடத்தியவரே முதல்வராக இருப்பதால் தமிழகம் கிராமங்கள் வளர்ச்சியின் பாதையில் நடைபோடுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.இதில், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஊராட்சி உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணை தலைவர் ரமணன், கார்த்திவேல்மாறன், பிடிஓக்கள் அமிர்தராஜ், லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த தவணி பகுதியில் கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் இலக்கியா சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் ஆனந்தி, மோட்சவாடி கூட்டுறவு சங்க செயலாளர் ரவி, ஊராட்சி துணை தலைவர் மகேஸ்வரி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சாந்தமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி கால்நடை துறை உதவி இயக்குனர் ஜான்சாமுவேல் பங்கேற்றார்.

செய்யாறு: செய்யாறு ஒன்றியம் எரையூர் கிராமத்தில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்றார். வெம்பாக்கம் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ராஜி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அருள்தேவி செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ஆரணி எம்பி விஷ்ணுபிரசாத் பங்கேற்றார்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி முருகன் கோயில் அருகே நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு விஜயன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் பங்கேற்றார். இதேபோல் கொளமஞ்சனூர், வரகூர், வாணாபுரம், ராதாபுரம், சே.ஆண்டாபட்டு, மலமஞ்சனூர், தென்கரும்பலூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Related Stories: