2 வாரத்தில் நிலைமை தலைகீழ் இயற்கை விவசாயம் செய்யும் ஆந்திர மாஜி துணை முதல்வர்

திருமலை: ஆந்திராவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு துணை முதல்வராக பரபரப்பாக காணப்பட்டவர் தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்களின் நிலைமை திடீரென தலைகீழாக மாறியது. ஒரு காலத்தில் அமைச்சர்களாக, துணை முதல்வர்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தற்போது ஜெகன்மோகன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதால் அமைச்சர்கள் எம்எல்ஏக்களாக மாறினர். ஜெகன்மோகன் அமைச்சரவையில் 11 பழைய அமைச்சர்களை தனது 2ம் கட்ட அமைச்சரவையில் நீடித்த ஜெகன்மோகன் 14 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்தார். இதில் முன்னாள் துணை முதல்வர் பாமுலா புஷ்பவாணியும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவர். துணை முதல்வராகவும், மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அவர், அமைச்சர் பதவியை இழந்ததும் இயற்கை விவசாயத்தில்  வீட்டிலேயே காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். ஜெகன் அமைச்சரவையில் இடம் பெற்ற ஐந்து துணை முதல்வர்களில் இவரும் ஒருவர்.

அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு எம்எல்ஏவாக உள்ள புஷ்பவாணி, இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தி வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதற்கு இதுவே சான்று என பலர் கூறுகின்றனர்.

Related Stories: