கொல்கத்தா: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் நடந்த 4 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் வெற்றி பெற்றன. இதில், அனைத்து இடங்களிலும் பாஜ தோல்வி அடைந்தது.மேற்கு வங்க மாநிலம் பாலிகன்ஞ்ச், பீகார் மாநிலம் போச்சஹா, சட்டீஸ்கர் மாநிலம் கைராகர், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவை தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மேற்கு வங்க மாநிலம், பாலிகன்ஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாரா ஹலிமை விட 20,038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங். 3ம் இடத்தையும், பாஜ 4ம் இடத்தையும் பிடித்தன. அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளரை, பாலிவுட் நடிகரும், திரிணாமுல் வேட்பாளருமான சத்ருகன் சின்கா 3 லட்சத்து 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.