நீடாமங்கலம் தாலுகா பகுதியில் கோடை சாகுபடி வயலில் களையெடுப்பு பணி தீவிரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் தாலுகா பகுதியில் 2,000 ஏக்கரில் கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டது. இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 43,500 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கரில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் கடந்த ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் நடந்து வந்தது.

அப்போது 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் மும்முரமாக தொடங்கியுள்ளது. இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுகா பகுதியில் இந்த ஆண்டு சுமார் 2,000 ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி ராஜப்பையன்சாவடி, அனுமந்தபுரம், காளிச்சேரி, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி, மேல்பாதி, பூவனூர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி மும்முரமாக செய்து வருகின்றனர்.

கோடை சாகுபடி செய்த வயல்களில் தஞ்சை சாலை கடம்பூர் பகுதியில் பெண் தொழிலாளர்கள் களை பறிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: