பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் குல்சார் அகமது?.. இம்ரான் கான் பரிந்துரை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான குல்சார் அகமதை நியமிக்க தற்போதைய பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில்  நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவித்தார். மேலும் அடுத்த 90 நாட்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரை இம்ரான்  கான் தற்காலிக பிரதமராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேநேரம் நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் அரசியலமைப்பு விதிகளின் படி தொடங்கியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான குல்சார் அகமதுவை இடைக்கால பிரதமராக நியமிக்குமாறு அதிபர் ஆரிஃப் அகமதுக்கு இம்ரான் கான் இன்று பரிந்துரைத்துள்ளார்.

பதவியில் இருக்கும் பிரதமரின் பரிந்துரையை ஏற்று இடைக்கால பிரதமரை நியமிக்க பாகிஸ்தான் அதிபருக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. ஒருவேளை, குல்சார் அகமது இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டால், அவர் முறைப்படி பதவியேற்கும் வரை பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: