ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் ரூ.2.25 கோடி ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்பேரில் வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அதில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள வெங்கடாபுரம், சென்னங்காரணி, வடதில்லை, பேரிட்டிவாக்கம், திருகண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6.30 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நிலங்களை ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கண்டறிந்து 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்வதை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.