சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் சாலையில் நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார்  தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் ரவிக்குமார் (42). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வரும் நிலையில், லாரி பராமரிப்பு செலவிற்காக நகைகளை அடகு வைக்கும் பொருட்டு அதே ஊரைச் சேர்ந்த உறவினரது காரில் சங்கரன்கோவிலுக்கு நேற்று மதியம் வந்தார்.

 அங்குள்ள தனியார் வங்கியில் நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட ரூ.3 லட்சத்தை காரில் வைத்தார். பின்னர் திருவேங்கடம் சாலையில் வாணியர் ஊரணி அருகேயுள்ள கரும்புசாறு கடைக்கு எதிர்ப்புறம் காரை நிறுத்திய இவர், கரும்புச்சாறு குடிக்கச் சென்றார். இதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க  இடதுபுற கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories: