இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டம்? தயார் நிலையில் 150 வீடுகள்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததுடன், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள்,  தமிழகத்திற்கு வரத் துவங்கியுள்ளனர். கடந்த இரு தினங்களில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்தனர்.

இவர்களில் இந்திய கடலோர காவல்  படையால் மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 6 பேரும் விசாரணைக்குப்பின் நேற்று  ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் மரைன் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில்  யாழ்ப்பாணம் கஜேந்திரன், இவரது மனைவி மேரிகிளாரின், தலைமன்னாரை சேர்ந்த டியோரி ஆகியோரை புழல் சிறையில் அடைக்க  நீதிபதி உத்தரவிட்டார். மேலும், டியோரியின் பிள்ளைகள் எஸ்தர், மோசஸ் இருவரையும் வேலூர் சிறப்பு முகாமில் உள்ள டியோரியின் பாட்டியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த சூழலில் தமிழக அரசு, அகதிகளாக வந்தவர்களை  சிறையிலடைக்க வேண்டாம். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து சிறையில் அடைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவிற்கு பின் 16 பேரும் மண்டபம் முகாமில்  தங்க வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதற்காக முகாமில் 150 வீடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உணவு வழங்க 30 சமையலர்கள்,  உதவியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் தவித்து வருகின்றன. இவர்களும் ஓரிரு நாட்களில் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: