பீஜிங்: ‘இந்தோ - பசிபிக் பகுதியில் நேட்டோ அமைப்பை விரிவுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியால், கற்பனை செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்,’ என்று சீனா எச்சரித்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில் சீனாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதருமான லீ யுசெங்க் கூறுகையில், ‘‘சோவியத் யூனியன் சிதைந்த பிறகு, வார்சா உடன்படிக்கையுடன் சேர்த்து நேட்டோ அமைப்பும் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நேட்டோ வலுவடைந்து விரிந்து கொண்டே செல்கிறது. இந்த விரிவாக்க முயற்சியால்தான் உக்ரைனில் இப்போது போர் ஏற்பட்டுள்ளது. இது ஒரு எச்சரிக்கை தான். இதே போல் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் திட்டமும் அபாயகரமானது. இது தடுக்கப்படாவிட்டால் கற்பனை செய்ய முடியாத விளைவுகளைக் கொண்டு வரும். இறுதியில் ஆசிய-பசிபிக் பகுதியை படுகுழியில் தள்ளிவிடும்,’’ என்றார்.