நாக படகுகள் தட்டுப்பாடு கோயில் கண்காணிப்பாளர், மதிப்பீட்டாளர் சஸ்பெண்ட்: ஸ்ரீகாளஹஸ்தியில் நடவடிக்கை

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில், ராகு - கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பயன்படுத்தும் நாக படகுகள் பக்தர்களுக்கு வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கோயில் கண்காணிப்பாளர், மதிப்பீட்டாளர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு உத்தரவிட்டார். சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் ராகு - கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பயன்படுத்தும் நாக படகுகள் பக்தர்களுக்கு வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக ராகு-கேது பூஜைகள் சுமார் அரை மணி நேரம் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ராகு, கேது பூஜை  பொருட்களை வழங்கும்  மையங்கள் அருகில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கம்பிகளை உடைத்தும் கண்ணாடிகளை சேதப்படுத்தியும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, 2 நாட்களுக்கு முன்னர் தெலுங்கு தேசம், பா.ஜனதா மற்றும் ஜனசேனா கட்சிகள் சிவன் கோயில் நிர்வாக அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் நாகபடகுகள் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையாளர் ஹரி ஜவகர்லால் கவனத்திற்கு செல்லப்பட்டது. அவர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜுவுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அறநிலைத்துறை ஆணையாளர் உத்தரவின்பேரில் நாகங்கள் தயார் செய்யும் (மின்ட்) மையம் கண்காணிப்பாளர் ரங்கசாமி மற்றும் மின்ட் அப்ரைசர் (மதிப்பீட்டாளர்) ரவியை பணி இடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் இரவு கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு உத்தரவிட்டார். அதேபோல் ராகு- கேது பூஜை டிக்கெட் (கவுண்டர்) மையங்கள் அருகில்  பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் இல்லாததால் கோயில் கண்காணிப்பாளர் விஜயசாரதி மற்றும் கோயிலின் துணை ஆணையாளராக பனிபுரியும் மல்லிகார்ஜுன பிரசாத்துக்கு மெமோ அனுப்பி வைத்தார். இதனால் சிவன் கோயில் அதிகாரிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories: