சட்டக்கல்வி நுழைவுத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும்: ஒன்றிய சட்ட அமைச்சருக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அனைத்து இந்திய அளவில் நடக்கிறது. வருகிற மே 8ம் தேதி அந்தத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளித் தேர்வுகள், மே மாதம் 5 முதல் 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு நடைபெறுகிற நாளில் தேர்வு இல்லை என்றாலும், அதற்கு மறுநாள் 9ம் தேதி ஒரு பாடத் தேர்வு இருக்கிறது. சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு எழுதுகிற மாணவர்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற குறிப்பிட்ட மையங்களில்தான் எழுத வேண்டும்.

எனவே, 9ம் தேதி மேல்நிலைத் தேர்வு எழுதுகின்ற மாணவர்கள், 7ம் தேதி இரவிலேயே பயணித்து, 8ம் தேதி சட்டக் கல்வி நுழைவுத்தேர்வு எழுதிவிட்டு, மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்து, மறுநாள், மேல்நிலைத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, போதுமான இடைவெளி தேவை என்பதால், சட்டக் கல்வி நுழைவுத் தேர்வை வேறு தேதியில் மாற்றி அமைக்க வேண்டும்.

Related Stories: