பக்தர்களின் ஆரூரா தியாகேசா கோஷம் முழங்க திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி வடம் பிடித்து இழுத்தனர்

திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேரானது  ஆசிய கண்டத்திலேயே  மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.  கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.  இந்த  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின்  மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது  வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது.

முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்காக தியாகராஜசுவாமி தனக்கே உரிய  அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு  நடைபெற்ற நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆழித்தேர்  வடம்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி காலை 8.10 மணியளவில் இந்துசமய  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபடி எழுப்பிய ஆரூரா தியாகேசா என்ற  பக்தி கோஷம் விண்ணை பிளந்தது. முன்னதாக காலை 5 மணியளவில்  விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.  ஆழித்தேருக்கு பின்னால் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்  வடம்பிடித்து இழுக்கப்பட்டன. மேலும் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தலைமையில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: