பாக்தாத்: ஈராக்கில் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் 12 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்கா, ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடம் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடந்தது. பாக்தாத்தில் உள்ள ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் ஏராளமான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவித்தனர். அவர்கள் இவற்றில் எதுவும் அமெரிக்க தூதரக கட்டிடத்தை தாக்கவில்லை. அதே நேரம் அதனை சுற்றிய பகுதிகளை தாக்கியது என்று கூறினர்.
பின்னர், ‘ஏறக்குறைய 12 ஏவுகணைகள் தாக்கியதாக தெரிவித்தனர். இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டது. ஏவுகணைகள் கட்டிடத்தை தாக்கின. ஆனால், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கட்டிடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின,’ என ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து பென்டகன் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 12 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இதில், 6 ஏவுகணைகள் தூதரக கட்டிடம் மீது பாய்ந்துள்ளது. மீதமுள்ளவை எங்கு பாய்ந்தது என்று தெரியவில்லை. இதில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் இல்லை,’ என்று தெரிவித்தார்.
* புத்தம் புதுசு...தாக்குதல் நடத்தப்பட்ட அமெரிக்க தூதரக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.