காஞ்சிபுரம்: மாவட்ட மக்கள் நலப் பணி திட்டங்களுக்கு ₹2.25 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நித்யா சுகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ஊராட்சிகளின் தேவைகள் மற்றும் நிவர்த்தி செய்யக்கூடிய நோக்கங்களை பற்றி கலந்தாலோசனை நடந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நலப்பணி திட்டங்களுக்கு ₹2.25 கோடியை, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தெரிவித்தார்.
தொடா்ந்து, ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களிடம் அவர்களது கோரிக்கைகள், மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதனை, உடனடியாக அதற்கான தீர்வு கண்டு நடைமுறைக்கு செயல்படுத்துவதாக கூறினார். பின்னர், பொதுப்பணி, மின்சாரம், மக்கள் நல்வாழ்வு ஆகிய துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர்கள் (குன்றத்தூர்) சரஸ்வதி மனோகரன், (பெரும்புதூர்) எஸ்.டி.கருணாநிதி, (வாலாஜாபாத்) தேவேந்திரன், (காஞ்சிபுரம்) மலர்கொடி குமார், (உத்திரமேரூர்) ஹேமலதா ஞானசேகரன், மாவட்ட ஊராட்சி குழு பொறுப்பு செயலாளர் கோபி, மாவட்ட கவுன்சிலர்கள் பத்மா பாபு, ஹரி, பொற்கொடி செல்வராஜ், சிவசங்கர், அமுதா செல்வம், ராமூர்த்தி, பாலா, வனிதா மகேந்திரன், ராஜலட்சுமி குஜராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.