கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த அ.சகிலா அறிவழகனும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.கேசவனும் வெற்றி பெற்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் 9 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், 1 விசிக, 1 பாமக, 1 சுயேச்சை கவுன்சிலர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த அதிகாரப்பூர்வ வேட்பாளராக அ.சகிலா அறிவழகனும், அவரை எதிர்த்து திமுக சார்பில் துர்கேஷ்வரி பாஸ்கரும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தேர்தல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தலைமையிலும், இளநிலை உதவியாளர் பிரபாகரன், தூய்மை பணி மேற்பார்வையாளர் குமார், பதிவரை எழுத்தர் ரவி, வரி தண்டலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.