‘என் சாவுக்கு காரணம் பெண் எஸ்ஐ’ வீடியோ வெளியிட்டு ஏட்டு தற்கொலை

சென்னை: அம்பத்தூர் ஒரகடம் ஆயிரத்தம்மன் நகர் பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (41). திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணகுமாருக்கும், ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.க்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார், முகப்பேரில் வசிக்கும் பெண் எஸ்.ஐ வீட்டுக்கு காரில் சென்று, போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகவலறிந்து வந்த நொளம்பூர் போலீசார், கிருஷ்ணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர்,  ‘எனது சாவுக்கு பெண் எஸ்.ஐ தான் காரணம்,’ என செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகுமார், கடந்த செப்டம்பர் மாதம் தனது பக்கத்து வீட்டினரிடம்போதையில் தகராறு செய்து அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதும், இதனால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: