திருத்தணி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான சூறை: காய்கறிகளை வீசியெறிந்து பக்தர்கள் வழிபாடு

திருத்தணி: அங்காள பரமேஸ்வரி கோவில் பிரமோற்சவ விழாவில், மயானசூறை நேற்று நடந்தது. திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயான சூறை பிரமோற்சவ விழா கடந்த, மாதம், 28ம் தேதி இரவு பெரியாண்டவர் விழாவுடன் துவங்கியது. சிவராத்திரி கரகம் ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. பிரமோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று மயானச்சூறை விழா நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், 1:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி, கரக ஊர்வலத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி நந்தி ஆற்றின் கரையில் எழுந்தருளினார். ஆற்றில் மயானச்சூறை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவர் அம்மன் மீது காய்கறிகள் கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை வீசி எறிந்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பர்வதராஜகுல மரபினர்  செய்திருந்தனர். நேற்று முதல் தினமும் இரவு ரிஷபம், நாகம், அன்னம், யானை, குதிரை, புலி, கேடயம் போன்ற வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Related Stories: