பிரைம் வாலிபால் லீக்: இறுதி போட்டியில் இன்று அகமதாபாத் - கொல்கத்தா மோதல்

ஐதராபாத்: பிரைம் வாலிபால் லீக் தொடரின் பைனலில் அகமதாபாத் டிபெண்டர்ஸ் - கொல்கத்தா தண்டர்போல்ட் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. தனியார் அமைப்பு நடத்தி வந்த இத்தொடரை, இப்போது கைப்பந்து விளையாட்டுச் சங்கமே நடத்துகிறது. ஐதராபாத், கச்சிபோலி அரங்கில் சென்னை பிளிட்ஸ், ஐதரபாத் பிளாக் ஹாக்ஸ், காலிகட் ஹீரோஸ், கொச்சி ஸ்பைக்கர்ஸ்,  பெங்களூரு டார்பெடோஸ், அகமதபாத் டிபெண்டர், கொல்கத்தா தண்டர்போல்ட் என 7 அணிகள் லீக் சுற்றில் மோதின. அதில் முதல் 4 இடங்களை பிடித்த அகமதாபாத், கொல்கத்தா, காலிகட், ஐதராபாத் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் அகமதாபாத்  15-13, 15-12, 9-15, 15-12 என்ற செட்களில் ஐதராபாத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் கொல்கத்தா 16-14, 15-10, 17-15 என நேர் செட்களில் காலிகட் அணியை வீழ்த்தியது. இன்று இரவு நடைபெற உள்ள பைனலில் அகமதாபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகமதாபாத் முதல் இடம் பிடித்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் 5 வெற்றி, ஒரு தோல்வி கண்டது. கொல்கத்தா 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 2வது இடத்தை எட்டியது. டாப் 2 அணிகள் மோதும் இன்றைய பைனல் வாலிபால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழக வீரர்கள்: ஒரு காலத்தில் தேசிய அணியில் ஆதிக்கம் செலுத்திய தமிழக வாலிபால் வீரர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டது. ஆனாலும், பிரைம் வாலிபால் லீக் தொடரில் நிறைய தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அகமதாபாத் அணியில் கேப்டன் முத்துசாமி, அங்கமுத்து, பிரசன்ன ராஜா, பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

Related Stories: