பவானி அருகே சோகம் கூரை வீடு தீப்பிடித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலி

பவானி: பவானி அருகே கூரை வீடு தீப்பிடித்த விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக பலியானார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சின்னவடமலைபாளையம், ஆலமரத்து வீதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி அய்யம்மாள் (35). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.  கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பிறந்த போது, இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது.

இதனால், இவரது தாய் சீரங்காயி பராமரிப்பில் கூரை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை சீரங்காயி சமையல் செய்வதற்காக அடுப்பைப்பற்ற வைத்துவிட்டு அருகில் உள்ள இளையமகன் மயில்சாமி வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுப்பிலிருந்து தீ எதிர்பாராமல் கூரைக்குப் பரவியது. அப்போது, கூரை வீட்டுக்குள் இருந்த அய்யம்மாள் மீதும் தீப்பிடித்ததில் உடல் கருகியது. இதில், பலத்த தீக்காயமடைந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூரை வீடு தீப்பிடித்ததைக் கண்ட அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: