காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அரசு ஐடிஐ செயல்படுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் (48) பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்து கொண்டு இருந்துள்ளான். இதனை கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனை கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆசிரியர், ஐடிஐ முதல்வரிடம் புகார் தெரிவிக்க, மாணவனின் பெற்றோரை அழைத்து இது குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர்.