காரியாபட்டி : காரியாபட்டி அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதியில் தினந்தோறும் இரவு நேரங்களில் தார்ச்சாலை அமைக்கப் பயன்படும் தார்க்கழிவு மற்றும் தகர டின்களை எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மதுரையை சேர்ந்த தனிநபர் ஒருவர் தார் டின்களை உடைத்து எரித்து மீண்டும் தகரமாக மாற்றி அமைக்கும் தொழில் செய்து வருகிறார். சாலைப்பணிக்காக பயன்படுத்திய காலி தார்டின்கள் மொத்தமாக வாங்கி அதை உடைத்த பிறகு மீதமுள்ள தார்க்கழிவை அகற்ற டின்களை தீ வைத்து எரிக்கின்றனர். அப்படி எரிக்கும்போது தார்டின்னில் உள்ள ரசாயனக்கலவை புகையாக வெளிவந்து பயிர்களை தாக்குகிறது. இதனால் பயிர்கள் வாடி வதங்கிவிடுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தார் டின்களை எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் ரசானயக்கழிவுகளால் விவசாய நிலங்களும், பயிர்களும் சேதமடைகின்றன. குறிப்பாக வாழைமரம், நிலக்கடலை, சக்கரவள்ளி கிழங்கு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவு புகையினால் மக்களுக்கு சுவாச பிரச்னை, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.