கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பன்னிமடை அருகே வரபாளையத்தில் மனோகர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு வாழை பயிரிட்டுள்ளார். வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க மின்சார வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பொன்னூத்து அம்மன் கோவில் வன பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த ஆண் யானை ஒன்று மனோகரன் தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலியை தாண்ட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. உடன் வந்த 2 குட்டி மற்றும் பெண் யானை சற்று தள்ளி அங்கும் இங்கும் சென்று சத்தம் எழுப்பியபடி காலை வரை அப்பகுதியிலேயே நின்றிருந்தன. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் வந்து விரட்டியபின் அவை காட்டுக்குள் சென்றன.