பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சில்லக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 350 காளைகள் ஆவேசமாக சீறிப்பாய்ந்தன. காளைகளை போட்டி போட்டு காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளி சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள், வீரர்கள் வந்தனர். முன்னதாக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையிலான மருத்துவ குழுவினர், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இறுதியாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 350 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மருத்துவ பரிசோதனை செய்து 300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.