சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்வெளியிடுள்ள அறிக்கை: வருவாய்துறையின் ‘தமிழ் நிலம்’ பதிவுகளின் போது அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் கோயில் சிட்டாவில் தனி நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதுடன், கோயில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் அரசு புறம்போக்கு என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நில பதிவுகளோடு பகுதியாக ஒத்துப்போகும் கோயில் நிலங்கள் குறித்தும் வருவாய்த்துறையில் மேல்முறையிடுகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் கோயில் பெயரில் பட்டா பெற்று சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது.
எனவே, கடந்த 7.5.2021 முதல் 31.1.2022 வரையிலான காலத்திற்கான இப்பணி விவரங்களை செயல் அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மண்டல இணை ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதனை அந்தந்த மண்டலம் முழுவதற்கும், சரியான முறையில் தொகுத்து மண்டல இணை ஆணையர்களால் கையொப்பமிட்டு 15.2.2022க்குள் கிடைக்குமாறு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும். பணி முன்னேற்றம் இல்லாத இனங்களுக்கும் அந்தந்த படிவங்களில் ‘ஏதுமில்லை’ எனக் குறிப்பிட்டு அதற்கான படிவத்தையும் இணைத்தனுப்பப்பட வேண்டும்.
அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு சுவாதீனத்தில் கொண்டுவரப்பட்டு வருகின்ற விவரங்களை பொது மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதால் இவ்விவர அறிக்கை அனுப்புவதில் தனிக்கவனம் செலுத்தி மேற்குறிப்பிட்ட தேதியில் தவறாமல் தனி நபர் மூலம் இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க அனைத்து இணை ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.