மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த அரவிந்த், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினேன். இதில், 500க்கு 441 மதிப்பெண் பெற்றேன். இதனால் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதினேன். இதில், 720க்கு 463 மதிப்பெண் பெற்றேன். என் தந்தை பாலசுப்ரமணியன், கடந்த 2002 முதல் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றுகிறார். முன்களப் பணியாளரான என் தந்தையின் பணி கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமாக இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரியான எனக்கு முன்களப்பணியாளர் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 1க்கு தள்ளி வைத்தார்.