சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலையில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நடமாடுவது வழக்கம். நேற்று காலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே 2 காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி சாலையோரம் சுற்றி திரிந்தன. காட்டு யானைகள் சாலையோரம் நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்கினர்.