ஊட்டி : உறைபனியில் இருந்து புல்வெளிகளை காக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும். ஆரம்பத்தில் நீர்பனிபொழிவாகவும், தொடர்ந்து உறைபனி பொழிவும் துவங்கும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைபனிப்பொழிவு கொட்டியது. இதனை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. இதனிடையே இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. மேலும் மேகமூட்டமான காலநிலையும் நிலவியது.