பரவும் தன்மை அதிகமாக இருந்தாலும் ஒமிக்ரானால் உயிர்ப்பலி ஏற்படும் வாய்ப்பு குறைவு-அழகப்பா பல்கலை. பேராசிரியர் தகவல்

காரைக்குடி : பரவும் தன்மை அதிகமாக இருந்தாலும் ஒமிக்ரானால் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புகள் குறைவு என அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரிதகவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் கூறியதாவது :கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்த்தொடர்பு புரதங்களை அழிக்கும் மருந்துகள் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஒமிக்ரான் வைரஸ் கடந்த 2021 நவம்பரில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படை மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 51 ஸ்பைக் புரதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

நோய் பரவலுக்கு முக்கிய பங்காற்றும் ஸ்பைக் புரதம் 1,273 அமினோ அமிலங்களை கொண்டது. இந்த ஸ்பைக் புரதம் பல்வேறு வகையான மரபணு மாற்றங்களுக்கு உட்படும் தன்மை கொண்டது. இது 13 வகையான ஆல்பா, 10 வகையான பீட்டா, 13 வகையான காமா, 15 வகையான டெல்டா, 32 வகையான ஒமிக்ரான் போன்ற ஸ்பைக் புரத மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

துவக்கத்தில் ஸ்பைக் புரத மூலக்கூறும், மனித புரத மூலக்கூறும் பிணைப்பு ஏற்பட்டபோது மைனஸ் 112.2 என இருந்தது. தற்போது அதே ஒமிக்ரான் பிணைப்பு ஏற்படும்போது மைனஸ் 139.8 என்ற நிலையில் உள்ளது. இதனால் ஒமிக்ரான் அதிகமாக பரவி வருகிறது. பரவும் தன்மை அதிகமாக இருந்தாலும் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புகள் குறைவு. நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிப்பது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதே சிறந்தது. இதன் மூலம் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: