திருவள்ளூர்: பள்ளிக்கு ஆசிரியர்களை சுழற்சிமுறையில் வரவழைக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், பள்ளிக் கல்வி ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் அ.மா.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், மாநில நிர்வாகிகள் சேது செல்வம், ஜெயக்குமார், ஆர்.கே.சாமி ஆகியோர் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து கொண்டே உள்ளது. இந்த சூழலில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை வல்லுனர்கள் ஆகியோருடன் தமிழக முதல்வர் ஆலோசித்து கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மாணவர்களை காப்பாற்ற, வரும் 31ம் தேதி வரை 1 முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்துள்ளார். இந்த முடிவை நமது பேரியக்கம் வரவேற்கிறது.