மேற்கு, தென் மாவட்டங்களில் 10 மாநகராட்சியை கேட்கும் பாஜ: வடமாவட்டங்களை அதிமுகவுக்கு தள்ளிவிட முடிவு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக தற்போது வெளியேறி விட்டன. அந்த கூட்டணியில், பெரிய கட்சியாக பாஜ மட்டுமே உள்ளது. தமிழகத்தில் பெரிய அளவில் கட்சி வளராவிட்டாலும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால், தமிழகத்தில் உள்ளாட்சிகளில் அதிமுகவுக்கு இணையாக சீட் வேண்டும் என்று கேட்க தொடங்கியுள்ளனர். 9 மாவட்ட உள்ளாட்சிகளில் பெரிய அளவில் அதிமுக சீட் ஒதுக்கவில்லை என்ற கோபம் பாஜவுக்கு உள்ளது. ஊராட்சி, மாவட்ட ஊராட்சி என்பதால் அதை விட்டுக் கொடுக்கவும் செய்தனர்.

ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தற்போது தேர்தல் நடைபெறுவதால், அதில் அதிமுகவுக்கு இணையாக குறிப்பாக 40 சதவீத இடங்கள் வேண்டும் என்று பாஜ கேட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. அதில் 10 மாநகராட்சிகள் தங்களுக்கு வேண்டும் என்று பாஜ கேட்க தொடங்கியுள்ளது. அதில் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அதிகமான மாநகராட்சிகளை கேட்கிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட 10 மாநகராட்சிகளை அக்கட்சி எதிர்பார்க்கிறது.

ஏனெனில், ஒவ்வொரு தலைவர்களும் தங்களுடைய ஆட்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அதிமுக தயவில் சில இடங்களையாவது பிடித்து விடலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில் அதிமுகவினரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக மக்கள் கருதுகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் திமுக அமோக வெற்றி பெறும். நாம் ஏன் தேவையில்லாமல் போட்டியிட்டு தோல்வி அடைவதற்காக செலவு செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிமுகவினர் போட்டியிட விரும்பவில்லை என்ற காரணத்தைக் கூறி பாஜ போட்டியிட விரும்புகிறது.

இதனால் மாநகராட்சியில் 10 இடங்களை கேட்கிறது. அதேபோல, நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பும் பாஜவினர் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சிகளே வேண்டாம் என்று கூறுகின்றனர். இதனால் தாங்கள் விரும்பும் பட்டியலை பாஜ தலைவர்கள் தயாரித்து தேர்தல் தேதி அறிவித்தவுடன் வழங்க உள்ளனர். பாஜவின் இந்த திடீர் வேகத்தைக் கண்டு அதிமுக திணறிப் போயுள்ளது. பேசாமல், மாநகராட்சிகள் தவிர மற்ற உள்ளாட்சிகளில், மாவட்ட தலைவர்களே முடிவு செய்வார்கள் என்று மாநில நிர்வாகிகள் கழண்டு கொள்ளலாமா என அதிமுக தலைவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே அதிமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: