தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 9 பேர் மன்னிப்பு கோரியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு!!

டெல்லி : தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பணி மூப்பு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம்  உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. இந்த நிலையில் 9 பேரும் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: