பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

மொகாலி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எனவே, பஞ்சாபை கைப்பற்ற பாஜ தீவிரமாக திட்டம் வகுத்து வருகிறது. அதே நேரத்தில் பஞ்சாப்பை நழுவ விட்டுவிட கூடாது என்பதில் காங்கிரசும் உறுதியாக உள்ளது.

இந்த கட்சிகளுக்கு போட்டியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளில் 77 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. பாஜவோ வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியோ, 20 தொகுதிகளை வென்று 2 பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வெளியிடுவதில் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லாமல் இருந்தார்.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் பக்வந்த் சிங் மான் மற்றும் மாநில பொறுப்பாளர் ராகவ் சதா ஆகியோரில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த யோசித்து வருவதாக கூறப்பட்டது. அதனால்தான், “ஜனதா சுனேகி ஆப்னா சி.எம்” என்ற பெயரில் புதிய திட்டத்தை அம்மாநில மக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, 70748 70748 என்ற போன் நம்பரை மக்கள் அழைத்து, தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம். ஜனவரி 17ம் தேதி மாலை வரை இந்த போன் வசதி இருக்கும் என்றும், விருப்பமான முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இதற்கான நேரம் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது. எனவே, இன்று அந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில், பஞ்சாப் மாநில தலைவர் பகவந்த் சிங் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறினர். அதன்படி இன்று மதியம் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார். அதன்படி, போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெற்ற வாக்குகளில் 93 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பகவந்த் மான் பெற்றுள்ளதாக நிருபர்களிடம் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரில் 3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருந்த சில வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெளிவாகிறது. ஒருவகையில், முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர், பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வராக இருப்பார்,’’ என்றார்.

Related Stories: