கொரேனா பரவல் தடுக்க வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மூடல்

ஈரோடு: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் நேற்று மூடப்பட்டது. ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

இதில், கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் பறவை சைபீரியா நாட்டில் இருந்தும் வருகிறது. இலங்கை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. இந்த பறவைகளை காண்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடு பயணிகளும் அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த சரணாலயத்தில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு வருகின்றன. நேற்று முதல் வெள்ளோடு பறவைகள் சரணாலயமும் மூடப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சரணாலயம் முன்பு அறிவிப்பு பலகையும் வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: