திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து முதல்வர் பினராய் விஜயன் அலுவலகம் இன்று மூடப்பட்டது. கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காத வகையில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று 22,946 பேருக்கு நோய் பரவியது. தொற்று சதவீதம் 33ஐ தாண்டியது. கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 5,863 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாவட்டத்தில் 100 பேரில் 44 பேருக்கு நோய் பரவியுள்ளது.