தரைப்பாலத்தில் குறையாத தண்ணீரால் 3 மாதமாக போக்குவரத்து நிறுத்தம்

திருவாடானை :  தரைப்பாலத்தில் தண்ணீர் குறையாததால் கடந்த 3 மாதமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு அரும்பூர் ஆதியூர் குளத்தூர் வழியாக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த சாலையில் திருவெற்றியூர் கிறிஸ்தவ ஆலயம் அருகே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த தரைப்பாலத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை நின்ற பின்னரும் தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீர் வெளியேறி ஓடாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வகை கார்கள் செல்ல முடியாமல் மாற்றுப்பாதை வெளியே பத்து கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றன.

அரசு டவுன் பஸ் சாலையில் தண்ணீர் இருந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் சிறிய வகை கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இன்னும் செல்ல முடியவில்லை. எனவே இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: