சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ம் தேதி நிலவரப்படி 10,978 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. 8ம் தேதி நிலவரப்படி மொத்த பரிசோதனையில் 8 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள எட்டு சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.