வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை, ₹1 லட்சம் அபராதம்-சித்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சித்தூர் : வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று சித்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி

யது. சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காளஹஸ்தி கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி கலால்துறை போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது   நக்கஜோதி(51) என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து நக்கஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 2016ம் ஆண்டு முதல் சித்தூர் 1வது கிளை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று 1வது கிளை நீதிமன்ற நீதிபதி வெங்கட ஹரிநாத் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நக்கஜோதிக்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து போலீசார் நக்க ஜோதியை சித்தூர் மாவட்ட மகளிர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: