இலங்கை கடற்படை கைது செய்த தங்கச்சிமடம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து கடந்த டிச. 19ல் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் விசைப்படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, 12 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை சட்டமா அதிபர் உத்தரவின்பேரில், தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் நேற்று காலை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து 12 மீனவர்களும் இன்னும் 2 தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: