தங்கம் கடத்தல் வழக்கில் சஸ்பெண்டான சிவசங்கருக்கு மீண்டும் பணி

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகம் உள்ளது. இந்த  தூதரகத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வந்த பார்சலில் 30  கிலோவுக்கும் மேல் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்க இலாகா,  மத்திய அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவை வழக்கு  பதிவு செய்து விசாரணையை தொடங்கின.

இந்த விசாரணையில் தங்கக்  கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது, தூதரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக  செயலாளராக பணிபுரிந்து வந்த சொப்னா என்பது தெரியவந்தது. இதையடுத்து  அவரையும், அவரது கூட்டாளிகளான தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக  பணிபுரிந்த சரித்குமார் உள்பட சிலரையும் என்ஐஏ கைது செய்தது. அவர்களிடம்  நடந்த விசாரணையில் சொப்னாவுடன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கு  தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இவர் கடந்த  2016ம் ஆண்டு முதல் முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக  இருந்தார்.  தன்னுடைய பதவியை பயன்படுத்தி தங்கக் கடத்தல் உள்பட பல்வேறு  முறைகேடான செயல்களுக்கு சொப்னாவுக்கு சிவசங்கர் உதவி செய்ததும் விசாரணையில்  தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு ் சிவசங்க கைதானார்.

தொடர்ந்து சிவசங்கர் பணியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  அதன் பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 16  மாதங்களுக்கு பிறகு அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறி கேரள  தலைமைச்செயலாளர் ஜோய், அரசுக்கு சிபாரிசு செய்தார். இதற்கு கேரள  முதல்வர் பினராய் விஜயன் ஒப்புதல் அளித்தார். . இன்னும் சில நாட்களில் அவருக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: