சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.