செய்யாறில் நட்பாக பழகி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கல்லூரி மாணவி பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். செய்யாறு பழனி தெருவை சேர்ந்தவர் சுதாகர்(36), பைனான்ஸ் ஊழியர். இவருக்கு ராதா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சுதாகரும், கல்லூரி மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தார்களாம். கடந்த மார்ச் மாதம் சுதாகர், கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.

பின்னர், தான் வாங்கி சென்ற குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அதனை மாணவிக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயங்கி விழுந்துள்ளார். அப்போது, மாணவியை சுதாகர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து கதறி அழுதுள்ளார். மேலும், இதுகுறித்து சுதாகரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சமாதானம் செய்துள்ளார்.

இதையடுத்து, திருமண ஆசை காட்டி சுதாகர் அடிக்கடி மாணவியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி கர்ப்பமானார். கடந்த 24ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து சுதாகரை நேற்று கைது செய்தார்.

Related Stories: