பீளமேடு: கோவை காளப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து இளைஞர்கள், இளம்பெண்கள் ஆயிரம் பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாமை திமுக இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இளைஞர் அணி செயலாளராக ஒரு தொகுதிக்கு இளைஞர் அணியில் 10 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்க வேண்டும் என்று எனக்கு தலைவரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 24 லட்சம் பேரை புதிதாக இளைஞர் அணியில் சேர்த்தேன். தலைவர் எனக்கு கொடுத்த இலக்கை போல இப்போது மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், உங்களுக்கும் ஒரு இலக்கை கொடுத்துள்ளார். அதன்படி, 2 கோடி பேரை திமுகவில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை கொடுத்துள்ளார்.