மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை: கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஜய் ஆனந்த் (42). இவர், மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உள்ளார். ஆன்லைன் வகுப்பில் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் அளித்து வந்தார். இது தொடர்பாக மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம் மதியம் வகுப்பை புறக்கணித்து பள்ளியின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்படவே போலீசார் வந்து மாணவிகளிடம் விசாரித்தனர்.

பின்னர் இது குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இது குறித்து விசாரித்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த விஜய் ஆனந்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விஜய் ஆனந்தை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: