அமிதாப் வசனத்தை மேற்கோள்காட்டி பிரியங்கா டிவிட் எனக்காக சகோதரிகள் உள்ளனர்

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பாஜ, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் பொது செயலாளரும், தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி ‘தேர்தலில் மகளிருக்கு 40 சதவீத இடஒதுக்கீடு அறிவித்து அசத்தியுள்ளார்’. மேலும் பெண்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மகளிருக்கான தேர்தல் அறிக்கையை ‘சக்தி விதான்’ என்ற தலைப்பில் வெளியிட்டார்.

இதற்கிடையில், பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் ‘உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனது அடிப்படையை இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பிரியங்கா, ‘நீங்கள் தீவார் பாலிவுட் படத்தில் வரும் டயலாக் கேட்டுள்ளீர்களா. அதில் அமிதாப்பச்சன் சசிகபூர் சகோதரர்களாக இருப்பார்கள். அப்போது அமிதாப், சசிகபூரை பார்த்து சொல்வார் ‘என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, அது உள்ளது, இது உள்ளது’ என்பார். அதற்கு சசிகபூர், ‘எனக்காக அம்மா இருக்கிறார்’ என்று பதிலளிப்பார். அதை தான் நானும் சொல்ல விரும்புகிறேன். ‘எனக்காக சகோதரிகள் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். பிரயாக்ராஜில் பிரதமர் மோடி, பெண்களுக்கு முன்னால் பணிந்ததில் இருந்து சகோதரிகள் ஒன்றிணைந்து புரட்சியை ஏற்படுத்த தீர்மானித்துள்ளார்கள் என்பது தெரிகிறது என்றார்.

Related Stories: