தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த 480 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த 480 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.தர்மபுரி  மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார்  பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய பழைய  கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.  கடந்த 17, 18ம் தேதிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது,  மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த பழைய கட்டிடங்கள்  கண்டறியப்பட்டன. இதன்படி 98 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள், 49 சத்துணவு மைய  கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 95 சிறு குடிநீர் தொட்டிகள், 202  கழிப்பறைகள், 42 ஆய்வுக்கூட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. மாவட்டத்தில்  மொத்தம் 480 கட்டிடங்கள் அடியோடு இடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி  மாவட்டத்தில் பள்ளிகளில் நடந்த ஆய்வின் அடிப்படையில், பழுதடைந்த 480 பள்ளி  கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், சீரமைக்கப்பட வேண்டிய  பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்  குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட  பல்வேறு அரசுத்துறைகள் வாயிலாக பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

இந்த பணிகள் குறித்த காலத்தில் முடிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி,  வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளை  சேர்ந்த அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, அனைத்து பள்ளிகளிலும் உள்ள  கட்டிடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல சேலம் மாவட்டத்தில் பழுதடைந்த 41 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: